search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபநாசம் அணை"

    • கடந்த மாத இறுதியில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 48 அடியாக இருந்த நிலையில், மழை காரணமாக இன்று 63.50 அடியை எட்டியுள்ளது.
    • நாலுமுக்கு எஸ்டேட் மற்றும் ஊத்து பகுதிகளில் மட்டும் லேசான சாரல் பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் பாபநாசம், சேர்வலாறு ஆகிய 2 அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 62 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் ஒன்றரை அடி உயர்ந்து 63.50 அடியாக உள்ளது.

    இந்த அணைக்கு வினாடிக்கு 1,078 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாத இறுதியில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 48 அடியாக இருந்த நிலையில், மழை காரணமாக இன்று 63.50 அடியை எட்டியுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் அணை நீர் இருப்பு சுமார் 15 அடி அதிகரித்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 76 அடியாக உள்ளது. நேற்று மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் லேசான மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று மழை இல்லை. நாலுமுக்கு எஸ்டேட் மற்றும் ஊத்து பகுதிகளில் மட்டும் லேசான சாரல் பெய்தது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த லேசான மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது. விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    அணை பகுதிகளில் குண்டாறு நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் நேற்று லேசான மழை பெய்தது. அந்த அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 25 அடியாக உள்ளது. அடவிநயினாரில் 86 அடியும், கடனா அணையில் 49 அடியும், ராமநதியில் 56 அடியும் நீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    • மணிமுத்தாறு அணை பகுதியிலும் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
    • காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலையில் கனமழை கொட்டியது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதில் தென்மாவட்டங்களில் வழக்கத்தைவிட மிகவும் குறைவாகவே பருவமழை பெய்தது. இதனால் குளங்கள் வறண்டன.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பருவமழை குறைவால் அணைகள் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வந்தது. மேலும் கோடையை மிஞ்சும் வகையில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது.

    நெல்லையில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. 2 நாட்களாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று அணை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் 48.90 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் சுமார் 5 அடி உயர்ந்து 54.20 அடியை எட்டியது.

    இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 22 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் 156 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி அதிகரித்து 72.93 அடியானது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 3,184 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 354 கனஅடி நீர் வினாடிக்கு திறந்துவிடப்படுகிறது.

    மணிமுத்தாறு அணை பகுதியிலும் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் 118 அடி கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 41.30 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் சுமார் 2 அடி அதிகரித்து 43.10 அடியானது. கொடுமுடியாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பையில் 21 மில்லிமீட்டரும், களக்காட்டில் 13.6 மில்லி மீட்டரும், கன்னடியனின் 15 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாஞ்சோலையை சுற்றியுள்ள எஸ்டேட்டுகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலையில் கனமழை கொட்டியது.

    மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நேற்று மதியத்திற்கு பிறகு இரவு வரையிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 16 சென்டிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி பகுதியில் 14.7 சென்டி மீட்டரும், மாஞ்சோலை எஸ்டேட்டில் 86 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 61 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அம்பை, வீரவ நல்லூர், முக்கூடல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. குண்டாறு அணை பகுதியில் 10.8 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    கடனா, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் தலா 1 அடியும், குண்டாறு அணை 2 அடியும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அடவி நயினார் அணை நீர்மட்டம் 81 அடியாகவும், ராமநதி அணை 53 அடியாகவும், கடனா அணை 47.50 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் 20 அடியை எட்டியுள்ளது.

    மாவட்டத்தில் செங்கோட்டையில் சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அதிக பட்சமாக சிவகிரியில் 28 மில்லி மீட்டரும், சங்கரன்கோவிலில் 22 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனடியாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    மேலும் மெயின் அருவிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. பின்னர் மழை நின்றதும், ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் அந்த அருவியில் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று காலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக கார்களில் அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மணிமுத்தாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு குற்றால அருவிகளுக்கும், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக சில நேரங்களில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    நேற்றும் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 49.2 மில்லிமீட்டரும், அடவி நயினார் பகுதியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    இதேபோல் கடனாநதி, கருப்பாநதி, ராமநதி, சிவகிரி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்மழை காரணமாக ஏற்கனவே 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

    நேற்று 66 அடியாக இருந்து அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 5 அடி உயர்ந்து 71 அடியாகவும், நேற்று 50 அடியாக இருந்த ராமநதி நீர்மட்டம் 4 அடி உயர்ந்து இன்று 54 அடியாகவும், 45 அடியாக இருந்த கடனாநதி நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 49 அடியாகவும், 32 அடியாக இருந்த கருப்பாநதி நீர்மட்டம் ஒரு அடியாக உயர்ந்து இன்று 33 அடியாகவும் உள்ளது.

    இன்று அதிகாலை முதலே தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

    இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, கடையம், கீழப்பாவூர், செங்கோட்டை ஆகிய 5 வட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் துரைரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், கொண்டாநகரம், சுத்தமல்லி, பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    மாநகரில் இன்று காலை பெய்த சாரல் மழை காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மழையில் குடைபிடித்து சென்றனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 143 அடி கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 53.50 அடியாக இருந்தது.

    இன்று மேலும் 6 அடி உயர்ந்து 59.65 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 3,299.375 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 438.50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர் மட்டம் நேற்று 90 அடியாக இருந்த நிலையில் 2 அடி உயர்ந்து இன்று 92.10 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.94 அடியாக உள்ளது.

    • அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
    • மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.

    நெல்லை:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் தற்போது வரை சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் அவ்வப்போது வீசி வருவதால் இதமான சூழ்நிலை விலவி வருகிறது.

    இதேபோல் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் நிலையில், புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணை பகுதிகளை பொறுத்தவரை ராமநதி, கடனா நதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குறிப்பாக ராமநதி அணை பகுதியில் கனமழை பெய்தது. நேற்று 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 25 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 8 அடி அதிகரித்து இன்று 33 அடியாக உயர்ந்துள்ளது. கடனா அணையின் நீர்மட்டம் 26.50 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து 28.50 அடியாக உள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் இன்று 4 அடி உயர்ந்து 25.25 அடியாக உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்தது. தொடர் மழையால் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 49 அடியாக உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 30 மில்லிமீட்டரும், ராமநதி, கடனா நதியில் தலா 13 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்த நிலையில், இன்று 3 அடி உயர்ந்து 44.20 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 56.76 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 65.09 அடியாக உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது பெய்துவரும் சாரல் மழை விவசாயத்திற்கு கை கொடுக்காவிட்டாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    அதேநேரத்தில் ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பார்கள். ஆனால் போதிய மழை இல்லாததால் 1 மாதம் தாமதமாகி விட்டது. எனவே மழை தீவிரம் அடைந்தால் இந்த மாதத்திலாவது பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாஞ்சாலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநகரில் லேசான சாரல் பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோரும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் குடைபிடித்தபடி சென்றனர்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணிமுத்தாறு அணை மட்டுமே உள்ளது.
    • தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.

    சிங்கை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான அணைகள் வறட்சியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

    வழக்கமாக மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 814 மில்லிமீட்டர் ஆகும். இந்த மாதம் வரை 181 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் சுமார் 72 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்றைய நிலவரப்படி 15.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதிலும் சுமார் 10 அடி வரையிலும் சகதி தான் இருக்கும் என்பதால் வறட்சியின் பிடியில் அணை சிக்கியுள்ளது. தற்போது அணையானது குட்டை போல் காட்சியளிக்கிறது.

    தற்போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணிமுத்தாறு அணை மட்டுமே உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 73.40 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணையில் மொத்தம் 5,511 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும்.

    ஆனால் இன்று நிலவரப்படி அந்த அணையில் 1756 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.

    • கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர்மட்டம் கடுமையாக குறைந்து வருகிறது.
    • தற்போதைய நிலவரப்படி பாபநாசம் அணையில் 16.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    சிங்கை:

    தென்தமிழகத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது தாமிரபரணி நதியாகும். தன்பொருநை என்று அழைக்கப்படும் இந்த நதியானது பொதிகை மலையில் உற்பத்தியாகி சுமார் 128 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

    இந்த நதியின் மூலமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாய பணிகள் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. இதன் குறுக்கே மேற்குத் தொடர்ச்சி மலையில் பாபநாசத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு தென்தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக உள்ளது.

    143 அடி உயரத்துடன் 5500 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கட்டு 1943-ல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த அணைக்கட்டு மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் தாமிரபரணி நதியில் பல்வேறு இடங்களில் உறைகிணறுகள் அமைத்து அதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகமும் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர்மட்டம் கடுமையாக குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாபநாசம் அணையில் 16.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவாக 13.65 அடியாக ஆனது. அதன் பின்னர் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழ் குறைந்தது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய அளவு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழையின்றி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதற்கிடையே அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.

    தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை மழையும் பொய்த்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்யும் வரை அணையில் நீர் வரத்துக்கு வழியில்லாததால் அணையின் நீர் மட்டம் உயர வழியில்லை. இனி தென்மேற்கு பருவமழை ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் தான் இருக்கும்.

    ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை இயல்பான மழை அளவை விட பாதி அளவிற்கும் கீழாகவே மழை பெய்துள்ளது.

    மார்ச் 1 முதல் இன்று வரையில் நெல்லை மாவட்டம் சராசரியாக வெறும் 30 மில்லிமீட்டர் அளவிலான மழையையே பெற்றுள்ளது. இது இயல்பை விட 58 சதவீதம் அளவுக்கு குறைவு தான்.

    இனி 2 மாதத்திற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. அணையின் நீர்மட்டமும் ஒற்றை இலக்கத்தை நோக்கி நகர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
    • மாஞ்சோலை பகுதியில் 3-வது நாளாக கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் 300 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று 2000 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 5,029 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது.

    நேற்று 90 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 96.70 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 807 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 11.8 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை கடந்த நிலையில் இன்று மேலும் 8 அடி உயர்ந்து 108.07 அடியானது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 90.40 அடியாக உள்ளது. அந்த அணைக்கு 70 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து 801 கனஅடியாக அதிகரித்துள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மாஞ்சோலை பகுதியில் 3-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. காக்காச்சியில் 5 சென்டிமீட்டரும், ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் தலா 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தை பொறுத்தவரை கன்னடியன், சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது. அம்பையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. ராதாபுரம் தாலுகாவில் பலத்தமழை பெய்தது. இன்று காலையில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர பகுதியில் நேற்று பெய்த மழையினால் ஒருசில இடங்களில் சாலையில் தேங்கிய தண்ணீர் வடியாமல் உள்ளது. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறி உள்ளது. அவற்றை தற்காலிகமாக சீரமைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஆய்க்குடியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

    அங்குள்ள மெயினருவி, பழையகுற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தை தூரத்தில் நின்றபடி ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ள தால் அய்யப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 25 மில்லிமீட்டரும், குண்டாறில் 18.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்மழையின் காரணமாக கடனா அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 71.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 79.25 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணையில் 34.50 அடி நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 63 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நெல் மற்றும் வாழை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • தற்போது மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
    • பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 98.60 அடியை எட்டி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தீவிரமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை கடந்த 3 நாட்களாக குறைந்து விட்டது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடிக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் லேசான சாரல் பெய்கிறது. எனினும் இதுவரை பெய்த மழையால் பெரும்பாலான குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பிசான பருவ சாகுபடியை தொடங்கி உள்ளனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை தொடர்மழை பெய்ததன் காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. ஆனால் தற்போது மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 98.60 அடியை எட்டி உள்ளது.

    அந்த அணைக்கு வினாடிக்கு 998.73 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்றும் ஒருசில நாட்களில் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 85 அடி வரை நீர் இருப்பு இருந்தாலே விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்துவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    • அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
    • பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அதில் ஆவுடையப்பன் கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

    இப்பகுதியில் உள்ள வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் பாசன விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை செய்ய அத்தியாவசியமாகவும், அவசரமாகவும் உள்ளதால், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் 2.2 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அணை பகுதிகளில் சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மெல்ல உயர தொடங்கி உள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 2 அடி உயர்ந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்துள்ளது.

    இதனால் அணை நீர்மட்டம் 83.45 அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 96.23 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1197.45 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 404.75 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாநகர பகுதியில் சில இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் 2.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. மொத்தம் 36.10 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு நிரம்புவதற்கு இன்னும் 2 அடி நீரே தேவைப்படுகிறது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 99.50 அடி நீர் இருப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக இன்று காலை முதலே அருவிக்கரைகளில் குவிந்தனர்.

    • தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • சேர்வலாறு அணை பகுதியில் 39 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு தொடர்ந்து சாரல் மழை கொட்டி வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 1195.26 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 80.25 அடியாக இருந்த நிலையில் இன்று காலை மேலும் 2 அடி உயர்ந்து 82.20 அடியாக அதிகரித்தது. சேர்வலாறு அணை பகுதியில் 39 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1585 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக காலையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மதியத்திற்கு பிறகு பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்கிறது.

    இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. புறநகரில் கன்னடியன், சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு சாரல் அடித்தது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    மாவட்டத்தில் செங்கோட்டை, ஆய்க்குடி, தென்காசி, சிவகிரி, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அடவிநயினார் அணையில் 12 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 8 மில்லிமீட்டரும், கடனாநதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் மழை இல்லாததால் குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துவிட்டது.
    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.

    நெல்லையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கத்தால் மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் வறண்டுவிட்டன. மாவட்டத்தில் உள்ள சுமார் 1205 குளங்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் குளங்கள் முற்றிலுமாக வறண்டு மண் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. மேலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை காப்பாற்றுவதற்காக பயிரிட்டுள்ள பயிர்களும் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்பட 6 அணைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசத்தில் இன்று காலை நிலவரப்படி 92.90 அடி நீர் இருப்பு உள்ளது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு தற்போது வினாடிக்கு 336 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    நெற்பயிர் சாகுபடி பணிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1104.75 அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், கடுமையான வெயில் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    கடந்த 20-ந்தேதி அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்த நிலையில் கடந்த 7 நாட்களில் 7 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது. தினமும் சராசரியாக 1 அடி நீர் இருப்பு குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    கடந்த 21-ந்தேதி சேர்வலாறு அணை நீர்மட்டம் 102.30 அடியாக இருந்த நிலையில் தற்போது 95.40 அடியாக குறைந்துள்ளது. இதேபோல் மாவட்டத்தில் அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் மழை இல்லாததால் குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துவிட்டது. மாவட்டத்தில் உள்ள ராமநதி, கடனா, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த அணைகளை நம்பி உள்ள விவசாய நிலங்களில் தற்போது பெரும்பாலான இடங்களில் நெல் அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டது. எனினும் நீர்மட்டம் குறைந்து வருவதால் குளங்கள் வறண்டு வருகின்றன. குண்டாறு அணை நீர்மட்டம் 18 அடியாக குறைந்துள்ளது.

    அணைகளில் நீர் இருப்பு குறைவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

    ×